தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகப் பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோர் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
தீபாவளி பண்டிகைக்காக மதுரை மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோர், தமிழக அரசின் வெடிபொருள் சட்டத்தின்கீழ் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை 5 நகல்களில் பூர்த்தி செய்து, உரிமக் கட்டணம் ரூ.1100-ஐ அரசுக் கணக்கில் செலுத்தி அதன் ரசீது இணைக்க வேண்டும். வீட்டு வரி ரசீது நகல், கடை வரைபடம், வாடகை கட்டடம் எனில் ஒப்பந்த பத்திரம், கட்டட உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியனவும் விண்ணப்பத்துடன் இணைப்பது அவசியம். கடைக்கு உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தனித்தனி வழி இருக்க வேண்டும். தீயணைப்பான், தண்ணீர் தொட்டி, மணல் வாளிகள் போதிய அளவில் வைக்கப்பட்டிருப்பது அவசியம். குடியிருப்புப் பகுதியில் கடை அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. கடந்த ஆண்டு தற்காலிக அனுமதி பெற்றிருந்தால் அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.