பிளாஸ்டிக் தடை ஆணையில் குடிநீர் பாக்கெட்டுகளுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு பாக்கெட் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ராஜசேகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மற்றும் மருத்துவப் பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகள் தவிர பிற பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு பாக்கெட் குடிநீர் உற்பத்தியாளர்களை வெகுவாக பாதிக்கும். இந்த தொழிலை நாங்கள் தமிழகம் முழுவதும் சிறு தொழிலாக மேற்கொண்டு வருகிறோம்.
எனவே பால், எண்ணெய் பாக்கெட்டுகளுக்கு விதி விலக்கு அளித்துள்ளது போல், குடிநீர் பாக்கெட்டுகளுக்கும் விதி விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.