மதுரையில் தனியார் வணிக வளாகத்தினர் ஆக்கிரமித்துள்ள பொதுப்பாதையை மீட்கக்கோரும் மனுவுக்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த முகமது ரஸ்வி தாக்கல் செய்த மனு விவரம்:
மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் மானகிரி பகுதிக்குச் செல்லும் சாலையில் 20 அடி பொது பாதையை தனியார் வணிக வளாகத்தினர் ஆக்கிரமித்து வாகன நிறுத்தகத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தனியார் வணிக வளாகத்திடம் இருந்து பொதுப்பாதையை மீட்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.