உசிலம்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் அண்ணனை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமலை மகன் அறிவழகன் (47). இவர் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவரது தங்கை சாந்தாதேவி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெல்லத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சாந்தாதேவிக்கும், சங்கரன்கோவிலைச் சேர்ந்த குருசாமி மகன் முருகையா (52) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. முருகையாவுக்கு இது இரண்டாவது திருமணம். திருமணம் முடிந்து ஓரிரு மாதத்திலேயே முருகையா துபை நாட்டுக்கு வேலைக்காகச் சென்றுவிட்டாராம். அதன்பின்னர், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய முருகையா தனது மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சித்துள்ளார்.
ஆனால், இதற்கு இடையூறாக அறிவழகன் இருந்ததாக, உசிலம்பட்டி கீழப்புதூர்-மதுரை பிரதான சாலையில் சனிக்கிழமை அறிவழகனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தார்.
இதையடுத்து, உசிலம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி மற்றும் போலீஸார் முருகையாவை கைது செய்தனர்.