சாலைகளை சீரமைக்கக் கோரிமார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் மறியல்

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மதுரை செல்லூர் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி 37 மற்றும் 38-ஆவது வார்டுகளுக்குள்பட்ட செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம், ஜான்சிராணிபுரம், மகான் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்க, மாநகராட்சி சார்பில் 2 மாதங்களுக்கு முன் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், இதுவரை சாலைப் பணிகள் தொடங்கப்படவில்லை.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் பரவிக் கிடப்பதால் நடந்து செல்வதற்குக் கூட சிரமமாக உள்ளது எனக் கூறி, இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிக் குழுச் செயலர் ஏ. பாலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், எம். பாலசுப்பிரமணியம், பகுதிக் குழு உறுப்பினர்கள், செல்லூர் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலைப் பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி மூலமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com