கமுதி அருகே திருட்டு பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் சாலை விபத்தில் சாவு
கமுதி அருகே இரு சக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்
கமுதி அருகே கே.வேப்பங்குளம் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற அடையாளம் தெரியாத இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த கமுதி போலீஸார், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் பரமக்குடியில் 2 நாள்களுக்கு முன் திருடுபோனது என்றும், இளைஞர் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை என்றும், அவரிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பின்னர், இளைஞரின் சடலத்தை கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.