நியாய விலைக் கடையாக மாற்றப்பட்ட நூலகம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை ஊராட்சியில் செயல்பாடற்றிருந்த நூலகக் கட்டடம், நியாய விலைக் கடையாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற இளைஞர்களுக்கு இணையாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்கள் கட்டித் திறக்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் பெருங்கரை ஊராட்சியில் புதிதாக நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் நேரடி காண்காணிப்பிலிருந்த இந்த நூலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல வகையான புத்தகங்கள் இருந்ததால், அக்கிராம மக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கமும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் திறமையும் வளர்ந்தன.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகக் கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்படத் தொடங்கியதால், முறையாக அங்கிருந்த நூல்கள் நிர்வகிக்காததால் அவை சேதமடைந்துள்ளன.
அமைதியற்ற சூழலில் உள்ள நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் குறையவே, நூலகம் செயல்பாடற்று போய்விட்டது. இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நூலகம் அவசியம் என்பதால், அங்குள்ள நியாயவிலைக் கடையை மாற்று இடத்துக்கு கொண்டு செல்வதுடன், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களுடன் நூலகத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.