புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் வெற்றி நிச்சயம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் பேசினார்.
ராமநாதபுரம் அரவிந்த அரங்கத்தில் உலக புத்தக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலர் சி. காளிதாஸ் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தின் தலைவர்கள் க. மங்களசுந்தரமூர்த்தி, ஆர். வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஆட்சியர் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்க்கு பரிசுகளை வழங்கி மேலும் பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட எந்தப் புத்தகத்தையும் பக்கம் பக்கமாக படித்து, விரைந்து வாசிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். தொடர்ந்து, படித்துக் கொண்டேயிருந்தால் வெற்றி நிச்சயமாகும். ஜவாஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத் கர், அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் எந்த நேரமும் படித்துக் கொண்டே இருந்ததனர். திறமை என்பது வெற்றி, தோல்வியில் இல்லை. தொடர்ந்து படிப்பதில் தான் இருக்கிறது என்றார். விழாவில் முன்னதாக, பரமக்குடி கிளை நூலகத்தின் நூலகர் மு. சக்திவேல் வரவேற்றுப் பேசினார். கம்பன் கழகச் செயலர் புலவர் அ. மாயழகு, தமிழ்ச் சங்க உறுப்பினர் பா. தீனதயாளன், திருநெல்வேலி இளையோர் மேம்பாட்டு மைய தலைவர் எஸ். பைரவராஜன், தமிழ் ஆசிரியை தமிழரசி உதயகுமார், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் கு. அற்புதஞான ருக்குமணி மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகளும் இணைந்து செய்திருந்தனர்.