ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் சவடு மண் எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் எம்.கரிசல்குளம், ஏ.உசிலங்குளம், பிள்ளையார்குளம், காணிக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் வழியே குண்டாறு பாய்கிறது. இந்த கிராமங்களில் சவடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சில குவாரி உரிமையாளர்கள் சவடு மண்ணுக்கு கீழிருக்கும் ஆற்று மணலை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. இதனால் ஆற்றின் இயற்கையான போக்கு மாறுகிறது. அதோடு கடல்நீர் உள்புகும் அபாயமும் உள்ளது.
எனவே கடலாடி தாலுகாவின் கீழுள்ள கிராமங்களில் ஆற்று மணல் எடுப்பதை தடுக்கவும், அவ்வாறு எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கடலாடி தாலுகாவில் சவடு மண் எடுக்க இடைக்கால தடை விதித்து, இதுதொடர்பாக ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.