போடியில் வியாழக்கிழமை, வியாபாரி தொலைத்த ரூ.1.30 லட்சம் கொண்ட பணப்பையை போலீஸார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சையது முகமது மகன் ஹக்கீம் (36). வியாபாரி. இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டத்தை குத்தகைக்கு பேசி அதற்கான முன்தொகையை தருவதற்காக தனது நண்பர்களுடன் போடிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மூணாறு சாலையில் சென்ற போது ஒரு தேநீர் கடையில் நண்பர்களுடன் அவர் தேநீர் அருந்தினார்.
பின்னர் மீண்டும் தங்களது வாகனத்தில் போடிமெட்டு மலைச்சாலையில் முந்தல் கிராமத்திற்கு சென்றபோது தான் ஹக்கீம் தான் எடுத்து வந்த பணப்பையை தேநீர் கடையிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது. திரும்ப வந்து பார்த்த போது அங்கு பணப்பையை காணவில்லை. இதையடுத்து போடி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் விஜயலட்சுமி, ராஜலிங்கம் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போது, பணப்பை ஒன்று கீழே கிடந்ததாக ஒருவர் எடுத்து வந்து தேநீர் கடையில் கொடுத்து விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பணப் பையை மீட்டு ஹக்கீமிடம் ஒப்படைத்தனர். அந்தப் பையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம், வங்கி காசோலை புத்தகம், செல்லிடப்பேசி மற்றும் ஆவணங்கள் இருந்தன.