ராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 9 -ஆம் தேதி முதல் 15 -ஆம் தேதி வரை தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, இளங்கோ மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.