முதுகுளத்தூரில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தாலுகா தலைவர் கே. ராமநாதன் தலைமை வகித்தார். தாலுகா செயலர் பி.கே. முருகேசன், மாவட்டப் பொருளாளர் கே. கணேசன், தாலுகா செயலர் ஏ. துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை முழுவதும் வழங்கக் கோரியும், விடுபட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும், கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தினை 150 நாள்களாக உயர்த்தவும், அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை கட்டவும், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலர் வி. மயில்வாகனன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். முடிவில், வி. காசிநாததுரை நன்றி தெரிவித்தார்.