ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக யானைகள் தின விழாவை முன்னிட்டு சனிக்கிழமை யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். ராமேசுவரம் சுழற் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் தில்லைபாக்கியம் பாலித்தீன் பைகளால் ஏற்படும் பேராபத்துகள் என்ற தலைப்பிலும், பள்ளியின் சுற்றுச்சுழல் மன்ற பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் ஆனந்தன், உலகம் வெப்பமயமாதல் தொடர்பாகவும் பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் ஜெயகாந்தன் யானைகளை பாதுகாப்பது மற்றும் பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். கருத்தரங்க நிறைவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கருத்தாளர்கள் என பலரும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள குட்டியானை ராமலெட்சுமிக்கு வாழைப்பழம், நாவல் பழம் மற்றும் கரும்புகளை வழங்கினர்.