ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட 2 டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். அவற்றை போட்டு விட்டு தப்பிஓடிய வாகன ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
நயினார்கோவில் அருகே கங்கைகொண்டான் வைகை ஆற்றுப் பகுதிக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் முறைகேடாக மணல் திருடப்பட்டு வருவது குறித்து பொதுமக்களிடமிருந்து போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வைகை ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 டிப்பர் லாரிகளில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மணல் அள்ளிவருவது தெரியவந்தது. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்து லாரி மற்றும் ஜே.சி.பி. இயந்திரந்தின் ஓட்டுநர்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். மணல் நிரப்பிய 2 லாரிகள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நயினார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி மற்றும் ஜே.சி.பி. இயந்திர ஓட்டுநர்களை தேடிவருகின்றனர்.