கமுதி அருகே இலந்தைகுளம் கிராமத்தில் கண்மாய்க்குள் இறந்த நிலையில் ஆண் புள்ளி மான் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் வசித்து வரும் அரிய வகை மான் இனங்கள் மர்மமான முறையிலும், நாய்கள் துரத்தி கடித்தும் அழிந்து வருவது நீடிக்கிறது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை கமுதி அருகே இலந்தைகுளம் கிராமத்தில் கண்மாய்க்குள் புள்ளிமான் இறந்துகிடந்தது. அதற்கு சுமார் 15 வயது இருக்கக்கூடும். சுமார் 60 கிலோ எடையுள்ளது. நாய், நரி போன்றவை கடித்துக் குதறிய அடையயாளமோ, அல்லது யாரும் தாக்கியதற்கான அடையளமோ காணப்படவில்லை. ஏதேனும் நோய் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் அல்லது நாய், நரி ஏதேனும் நீண்ட தூரம் விரட்டிச் சென்றதில், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மான் இறந்து குறித்து வனத்துறை பணியாளர் ரவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மானின் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனை செய்த பின்பு அங்கேயே புதைத்தனர்.