கமுதி அருகே அபிராமத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் இல்லாததால் ஆறுகள், விளைநிலங்களில் மணல் கடத்துவது அதிகரித்துள்ளது. தடுக்க வேண்டிய போலீஸாரும் தடுக்காததால் தொடர் மணல் கடத்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் அபிராமம் அருகே மேலக்கொடுமலூர்-செய்யாமங்களம் இடைப்பட்ட பரளையாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அப்பகுதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த எம்.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தியை கைது செய்தனர். மேலும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்து, பரமக்குடி சார் ஆட்சியரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர்.