கடலாடி அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகள் இருவரை செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலாடி அருகே உள்ள எம்.கரிசல்குளத்தை சேர்ந்த கந்தன் மகன் பழனிநாதன், 28, மாயாகுளத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜூ, 26, ஆகிய இருவர் மீதும் சாயல்குடி, கடலாடி, திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு, அடிதடி, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பல மாதங்களாக இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து பல்வேறு இடங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதுகுளத்தூர் டி.எஸ்.பி., ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடியதில் இருவரும் சிக்கினர். இதையடுத்து ஆட்சியர் பரிந்துரையின்பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.