துபை நாட்டிற்கு மீன்பிடிக்க சென்று,கடலில் தவறி விழுந்து உயிரிழ்ந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் மீனவர் காலணியை சேர்ந்த நம்புமுருகன்(23) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்க துபையில் அமைதியா பகுதிக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். துபையில் உள்ள அவரது உடலை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் உயிரிழந்த மீனவரின் கிராமத்திற்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்கூறியது: மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இறந்த மீனவர் உடலை கொண்டு வரவேண்டும், ஏற்கெனவே மீனவரின் தந்தை இறந்து விட்ட நிலையில் அவரை நம்பித்தான் தாய் இருந்தார். இதனால் தாயின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி.செந்தில்,மாதர் சங்க மாவட்டத் தலைவர் வடகொரியா, சி.ஐ.டி.யு நிர்வாகிகள் மோகன்தாஸ், எம்.செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.