சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதன்கிழமை கடைகளில் சோதனை நடத்தி தரமற்ற பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா உத்தரவின்படி மானாமதுரையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது தலைமையில் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், மேல்கரை, பார்த்திபனூர் ரஸ்தா, குண்டுராயர்தெரு, கீழ்கரை, பாகபத்அக்ராகரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது விற்பனைக்காவும் பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், டீக்கப்புகள், குளிர்பானம் உறிஞ்சிக் குடிக்கும் குழாய்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சி பகுதியில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்ய தடை உள்ளது.
மீறி விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு, கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.