ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மனநலக் காப்பகத்தில் வசிப்பவர்களுக்கு காகிதப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றதையடுத்து, பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏர்வாடியில் உள்ள மனநலக் காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் 26 பேருக்கு காகிதத்தில் கூடைகள், தட்டுகள், பைகள் ஆகியன தயாரிக்கும் பயிற்சி 10 நாள்களுக்கு நடத்தப்பட்டது.
பயிற்சி நிறைவு விழா ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் நடைபெற்றது.விழாவுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் ஆர். ஷியாமளநாதன் தலைமை வகித்தார். மனநல மருத்துவர் பெரியார் லெனின், மருத்துவர் காண்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ப. மாரியம்மாள், பயிற்சியை முடித்த 26 மனநல நோயாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். இதில், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய ஊழியர் கலையரசன், மறுவாழ்வு மைய நிர்வாகிகள் பிரியா, மாடசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக, பயிற்சி ஆசிரியை என். ராஜேஸ்வரி வரவேற்றுப் பேசினார்.