காசியிலிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் கேரள மாநில ஐயப்ப பக்தருக்கு, ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு திருநல்லைப் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் பத்மனாபன்(57). இவர், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி காசியிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம் வழியாக நடைபயணம் மேற்கொண்டு ராமேசுவரம் வந்து சேர்ந்தார். அங்கு, சுவாமி தரிசனம் முடித்து சபரிமலை செல்லும் வழியில் ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் அருள்மிகு ஐயப்பன் கோயிலை வந்தடைந்தார்.
கோயிலில் தலைமைக் குருவடியார் மோகன் சுவாமிகள் தலைமையில், ஐயப்ப பக்தர் பத்மனாபனுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அருள்மிகு வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. பின்னர், அவர் ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
பாதயாத்திரை குறித்து ஐயப்ப பக்தர் பத்மனாபன் கூறுகையில், உலக நன்மைக்காகவும், சபரிமலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என, தொடர்ந்து 24 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறேன். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோயில்களில் இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.