தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர் அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்திக் குறிப்பு விவரம்: அம்பேத்கர் விருது ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்படவுள்ளது. எனவே, தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களிடமிருந்து விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை, ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விருதுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் உள்ளிட்ட சமுதாயப் பணிகள் தகுதியாக கருதப்படுகின்றன.
இத்தகுதியுடைய நபர்கள், தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இம்மாதம் 20 ஆம் தேதிக்குள், ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.