முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் மணல் திருடப்பட்டு, லாரிகளில் ஏற்றி அதன் மேல் செங்கலை அடுக்கி நூதன முறையில் கடத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அருகே மட்டும் அரசு மணல் குவாரி இயங்கி வந்த நிலையில், தற்போது அது மூடப்பட்டு விட்டது. ஆன்-லைன் மூலம் பதிவதால், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நேரங்களில் மணல் கிடைப்பதில்லை. எனவே, கட்டட உரிமையாளர்கள் மணல் தட்டுப்பாட்டால் 3 யூனிட் மணலுக்கு ரூ. 27 ஆயிரம் விலை கொடுக்கின்றனர்.
இதை பயன்படுத்திக் கொண்ட மணல் திருடர்கள், இரவு நேரங்களில் விவசாய நிலங்கள், கண்மாய்கள், ஊருணிகளில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி லாரிகளில் ஏற்றுகின்றனர். பின்னர், அந்த மணல் மீது செங்கற்களை அடுக்கி வைத்து செங்கல் செங்கல் லோடு போல் மணலை கடத்தி வருகின்றனர். இதனால், நீர்நிலைகள் அழிவதுடன் நீர் ஆதாரம் வெகுவாகப் பாதிக்கிறது.
மணல் குவாரிகள் இல்லாத நிலையில், சாம்பக்குளத்தில் திருட்டுத்தனமாக வயல்வெளிகள், ஊருணிகளில் மணலை திருடி ஊருக்கு அருகில் குவித்து வைத்துள்ளனர்.
இதேபோன்று, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் நூதன முறையில் லாரிகள் மூலம் மணலை திருடுவதால், தனிப்படை அமைத்து இக்கும்பலை பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.