இலங்கை சிறையில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வரும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, மீனவ சங்கப் பொதுச் செயலர் என்.ஜே. போஸ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டுச் சிறையில் நோய்வாய்ப்பட்டு அவதியடைந்து வரும் 160-க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு சேதமடைந்து வரும் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும்.
ராமேசுவரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சேதமடைந்துள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
மீனவர் சேமிப்பு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ள 400-க்கும் மேற்பட்ட படகு உரிமையாளர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரணத்தைப் போல தமிழக அரசும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மீனவ சங்கத் தலைவர்கள் தேவதாஸ், ஜேசுராஜ், எமரிட், சகாயம் மற்றும் மீனவ மகளிர் அமைப்புகள், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.