முதுகுளத்தூர் அருகே வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர் வெளியேற முடியாமல், சாலை பாலம் சேதமடைந்து விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்அருகே கீரனூரில் 52 மீ., பொதுப்பாதை, சாலையோர வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளன. இதனால் நல்லூர் காலனி, புறம்போக்கு, தரிசு நிலங்களிலிருந்து வந்த மழைநீர் கீரனூர் சாலையோர ஊருணியில் தேங்கி, எஞ்சிய மழைநீர் வரத்து கால்வாய்கள் மூலமாக வெளியேற முடியாமல், சாலையின் குறுக்கே உள்ள பாலத்தில் தேங்கியது. இதனால் தரமின்றி அமைக்கபட்ட சிறுபாலம் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பாலத்தை கிராம இளைஞர்கள் எச்சரிக்கும் வகையில் சாலையோரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, சிவப்பு துணிகளால் எச்சரிக்கை கொடியையும் நட்டு வைத்துள்ளனர்.
குறுகலான சேதமடைந்த இந்த பாலத்தால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், இரவு நேரங்களில் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரத்து கால்வாய், பொதுபாதை ஆக்கிரமிப்பு குறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.