இறால் பண்ணையை அகற்றக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் வியாழக்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவாடானை அருகேயுள்ள கலியநகரி அழகன்வயல் கிராமத்தைச் சேர்ந்த கௌதமன்,முத்துவேல் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் எஸ்.நடராஜனை கிராமத்தை மக்கள் சந்தித்து அளித்த மனு விவரம்:
திருவாடானை தாலுகா பாசிப்பட்டினம் அருகேயுள்ள கலியநகரி அழகன்வயல் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
விளைநிலங்கள், குடிநீர் ஊருணி ஆகியனவற்றுக்கு நடுவில் இப்பண்ணை அமைந்திருப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிநீர் உப்பு நீராக மாறி வருகிறது. பண்ணையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் குடியிருப்புகள் வழியாக செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.