நயினார்கோவில் அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை உரிய அரசு அனுமதி பெறாமல் எருதுகட்டு விழா நடத்தியதாக 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நயினார்கோவில் ஒன்றியம் கொட்டகுடி கிராமத்தில் அடைக்கலமாதா அய்யனார்கோயில் விழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டும் விழா நடத்த அக்கிராமத் தலைவர் காசிநாதன் மகன் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் அனுமதி கோரியுள்ளார். அதில் 2 எருதுகள் மட்டும் விடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற எருதுகட்டு விழாவின் போது விதிமுறைகளை மீறி காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுவாசாதிக் மகன் சாலிக், கருப்பையா மகன் ஆதித்தன், தலையடிகோட்டையைச் சேர்ந்த கணேசன், இருளையா மகன் பெருமாள், பெரனாவூரைச் சேர்ந்த மனோகரன் மகன் ராம்குமார் ஆகியோர் 9 எருதுகளை விட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறி எருதுகட்டு நடத்தியதாக நயினார்கோவில் காவல் நிலையத்தில் கொட்டகுடி கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் கிராமத் தலைவர் ராஜேந்திரன், கணேசன், ஆதித்தன் உள்பட 6 பேர் மீது காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா வழக்குப் பதிவு செய்துள்ளார்.