மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இலங்கை அகதி மாணவியரை புதிய கட்டட வகுப்பறைக்கு மாற்றும் முயற்சியை கைவிடக் கோரி ஆட்சியர் எஸ்.நடராஜனை திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அகதி மாணவியர் மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 68 இலங்கை அகதி மாணவியர் உள்பட 600 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபத்தில் தியாகராய நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கென புதிதாக கட்டடம் கட்டப்பட்டு அங்கு பள்ளி மாற்றம் செய்யப்படவுள்ளது. இச்சூழ்நிலையில் அகதிகள் முகாம் பள்ளியில் பயிலும் மாணவியர் 68 பேரையும் சேர்த்து புதிய பள்ளிக்கு மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து இலங்கை அகதி மாணவியர் ஆட்சியரிடம் அளித்த மனு: மாற்றம் செய்யப்படவுள்ள பள்ளி அகதிகள் முகாமில் இருந்து சுமார் 5 கி.மீ.தூரத்தில் உள்ளது. போதுமான போக்குவரத்து வசதிகளும் இல்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையை கடந்து வர வேண்டியுள்ளது. எனவே நாங்கள் பழைய இடத்திலேயே கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை அகதி மாணவியருடன் அவர்களது பெற்றோர்களும் உடன் வந்திருந்தனர்.