பரமக்குடியில் கட்டுமானக் கழிவுகளை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டி வைத்துள்ளனர். இதனை அவ்வழியாக காரில் சென்ற சாமியார் அப்புறப்படுத்தும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டார்.
பரமக்குடி நகராட்சியில் பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது அனைத்து இடங்களிலும் சாலை மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து கட்டுமானக் கழிவு மற்றும் கட்டுமான பொருள்களை போட்டு வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில் சின்னக்கடைத் தெரு, கன்னிசுந்தர்ராஜன் தெரு வழியாக திங்கள்கிழமை காரில் அணுகுசாலைக்கு ஒரு சாமியார் சென்றார். கட்டடக் கழிவுகளால் அவரது கார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் கொட்டப்பட்டிருந்த கட்டுமானக் கழிவுகளை அவரே அப்புறப்படுத்தினார்.
இதுபோன்ற இடங்களில் ஏதேனும் ஆபத்துக்காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களோ, தீயணைப்பு வாகனமோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகளை போக்குவரத்துக்கு இடையூறின்றி பணி மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.