குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன் அஞ்சலி செலுத்தினார்.
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன் கலாமின் சமாதி முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கலாம் மணிமண்டபத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளையும்,அதன் சிறப்புகளையும் மத்திய பாதுகாப்பு,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக பொறியாளர்கள்,அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து கலாம் மணிமண்டபத் திறப்பு விழாவின் போது பிரதமர்,முதல்வர் கலந்து கொள்ளவுள்ள விழா மேடை அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சருடன் ஆட்சியர் எஸ்.நடராஜன் மற்றும் அதிமுக கழக பிரமுகர்கள் தஞ்சை சுரேஷ்.மருதுபாண்டியன்,முத்துப்பாண்டியன் ஆகியோரும் இருந்தனர்.