குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் அப்துல் கலாம் இளைஞர் மன்றத்தினர் அப்பகுதியில் உள்ள குடிநீர் கிணறு, ஊருணி, வரத்துகால்வாய்களைத் தூர்வாரும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
கமுதி அருகே உள்ள காடமங்கலம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத இரண்டு குடிநீர் கிணறுகள், ஊரணி, குளம், கண்மாய், குளங்கள் ஆகியவை முறையாக தூர்வாரப்படாததால் அங்கு விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மழை நீரைச் சேமித்து வைத்து விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி குடிநீர் கிணறு, ஊரணி, கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களை காடமங்கலம் கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடன் காடமங்கலம் கிராமத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஜேசிபி, பொக்லைன் இயந்திரம், டிராக்டர் போன்றவை மூலமாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்துல் கலாம் மன்ற தலைவர் காளீஸ்வரன் கூறியதாவது. குடிநீர் கிணறு முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் இன்றி தவிக்கும் அப்பகுதியினர் தனியாரிடம் ஒரு குடம் நீரை ரூ,10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு காடமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று குடிநீர் கிணறு, ஊருணி, குளங்களைத் தூர்வாரும் பணிகள், மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறோம்.
இதே போன்று தங்களது இளைஞர் மன்றத்தை இலவசமாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது பகுதிகளில் தூர்வாரப்படாத நீர் நிலைகள், குடிநீர் கிணறுகளைத் தூர்வாரும் பணிகளுக்காகத் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.