பிரதமர் வருகை தருவதை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவம் பேக்கரும்பில் உள்ள கலாமின் மணிமண்டபத்தை வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தேசிய பாதுகாப்புப்படை ஏ.ஐ.ஜி.சர்மா தலைமையிலான அதிகாரிகள் பேக்கரும்பு பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். கலாமின் மணிமண்டபம், மண்டபத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அருகில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகள், சுமார் 50 ஆயிரம் பார்வையாளர்கள் அமருவதற்கான இடம் ஆகியனவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன்,டி.ஐ.ஜி.(பொறுப்பு)பிரதீப்குமார், எஸ்.பி.ஓம்பிரகாஷ்மீனா, ராமேசுவரம் துணை வட்டாட்சியர் அப்துல்ஜப்பார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் ,பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.