திருவாடானை அருகே தொண்டியிலிருந்து மதுரைக்கு 1-2-3 என்ற விரைவுப் பேருந்து இயக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டியிலிருந்து மதுரைக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொண்டி சுற்று வட்டாரப் பகுதி மக்களில் பெரும்பாலோர் மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மதுரைக்கு சென்று திரும்புகின்றனர். தொண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் செல்ல 4 மணி நேரமாகிறது. வழியில் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை என முக்கிய ஊர்களிலும் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சிற்றூர்களிலும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இதனால், பொதுமக்கள் விரைவில் மதுரை செல்ல முடியவில்லை. எனவே, தொண்டியிலிருந்து சிவகங்கை, மதுரை என 1-2-3 எனப்படும் அரசு விரைவுப் பேருந்தை இயக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.