ராமநாதபுரம் அருகேயுள்ள தெஞ்சியேந்தல் கிராம கண்மாய்கள், குளங்களை தூர்வாருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
தெஞ்சியேந்தல் கிராமத் தலைவர் கு.போஸ்லிங்கம் தலைமையில் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது: எங்களது கிராம கண்மாய்கள், குளங்கள் எதுவும் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இது குறித்து பொதுப்பணித்துறையிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கண்மாய்கள், குளங்களை தூர்வார உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
முதியோர் உதவித்தொகை கோரி மனு: கீழக்கரை அருகே மாலங்குடி கிராமத்தை சேர்ந்த விதவை மூதாட்டிகளான வள்ளி, நாகம்மாள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், பல ஆண்டுகளாக எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.