முதுகுளத்தூரில் நடந்த கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரை சிலர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதற்கு பழிக்குப்பழியாக வீரம்பல் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன்களான செந்தூர்பாண்டி(38), இவரது தம்பி சேதுப்பாண்டி(35) என்ற இருவரும் சேர்ந்து அறிவழகன் என்பவரை கடந்த 9.9.2009 இல் கொலை செய்தனர். இக்கொலை தொடர்பாக முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியையும், சேதுபாண்டியையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இக்கொலை வழக்கு ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் செந்தூர்பாண்டி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 15.3.2011 முதல் தலைமறைவானார். சேதுபாண்டி மட்டும் தொடர்ந்து ஆஜராகி வந்தார். இதையடுத்து நீதிமன்றம் செந்தூர்பாண்டிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
செந்தூர்பாண்டி 4 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து விட்டு பின்னர் கோயம்புத்தூர் வந்து அங்கு தலைமறைவாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்து முதுகுளத்தூர் போலீஸார் கோயம்புத்தூர் சென்று செந்தூர்பாண்டியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறைச்சாலையில் அடைத்தனர்.