பரமக்குடியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் பெண்கள் காலி குடங்களுடன் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி கிழக்குப் பகுதிகளான திருவள்ளுவர் நகர், தெற்கு பள்ளிவாசல், சந்தைக்கடைத் தெரு மற்றும் நகரின் மையப்பகுதியான சுப்பிரமணி கோவில் தெரு, எஸ்.எம்.அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சார்பில் 5 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது 10 நாள்களுக்கு மேலாகியும் அப்பகுதிகளில் குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் எமனேசுவரம், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியின் கோரிக்கை விடுத்துள்ளனர்.