பரமக்குடி நகரில் சீரானமுறையில் குடிநீர் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக வந்து நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
பரமக்குடியில் 2 மாதங்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஆயிரவைசிய சபை சார்பில் அதன் தலைவர் எஸ்.பாலுச்சாமி தலைமையில், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராசி என்.போஸ், சபை செயலாளர் பா.ஜெகநாதன், பொருளாளர் ஏ.ஆர்.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்களுடன் இணைந்து மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து கடைவீதிகளின் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். குடிநீரை முறையாக வழங்கக்கோரி நகராட்சி ஆணையர் எஸ்.நாராயணனிடம் மனுக்களை அளித்தனர். தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் ஆணையர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆணையரிடம் புகார் தெரிவிக்கையில், லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இதுவரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போது குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றனர்.
குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண வைகை ஆற்றில் நீர் ஆதாரமுள்ள விவசாய பண்ணை, புல்பண்ணை உள்ளிட்ட 6 இடங்களில் ஆழ்துளைகள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையர் பதிலளித்தார்.