பாம்பன் சாலைப்பாலத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும்,ராமேசுவரம் தீவையும் பாம்பன் சாலைப் பாலம் இணைக்கிறது. இப்பாலத்தின் உள்புறம் உயர் மின்அழுத்த மின்கம்பி மூலம் ராமேசுவரம் தீவு, பாம்பன், தங்கச்சி மடம், அக்காள் மடம் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை இரவு அந்த உயர்மின்அழுத்த வயரில் திடீரென தீப்பற்றியது. இதனால் ராமேசுவரம் தீவுப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
மின்தடை ஏற்பட்டதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, பாம்பன் மேம்பாலத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலத்தின் மேல்மட்ட தடுப்புச்சுவரை உடைத்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து மின் கம்பிகளையும் மாற்றினர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ராமேசுவரம் தீவுப்பகுதிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் விரைந்து செயல்பட்டு சரி செய்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.