ராமேசுவரம் பகுதியில் இருந்த மீன் பிடிக்கச் சென்ற மீனவர் திரும்பி வராததால், அவரை மீட்கக் கோரி 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம் சுடுகாட்டான்பட்டி மீனவ கிராமத்தை சேர்ந்த எட்வர்ட் பிரான்சிஸ்(55). இவர் சங்குமால் துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளார். திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டிய அவர் கரை திரும்பவில்லை. இதையடுத்து அவரை மீட்டுத் தரக் கோரி மீன்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் எட்வர்ட் பிரான்சிஸின் உறவினர்கள் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், செவ்வாய்க்கிழமை 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் 3 படகுகளில் மாயமான மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் எட்வர்ட் பிரான்சிஸை மீட்டுத் தரக் கோரி ராமேசுவரத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.