கமுதி சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் 10 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள், 20 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன.
கமுதி அருகே கூலிப்பட்டி, ராமசாமிபட்டி, கோரப்பள்ளம், கிழாமரம், காவடிபட்டி, நீராவி, கரிசல்குளம், கீழமுடிமன்னார்கோட்டை, மேலமுடிமன்னார்கோட்டை, தோப்புநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் திங்கள்கிழமை மாலை ஒரு மணி நேரம் இடி மின்னல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில், கோரப்பள்ளம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒடிந்து வயல்களில் விழுந்தன. இதனால் மின் வினியோகம் முற்றிலும் தடை பெற்றுள்ளது.
இதே போன்று கூலிபட்டி ராமர், என்.கரிசல்குளம் கணேசன் ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் வாழை மரங்கள், கொய்யா மரங்கள், கோரப்பள்ளம் கருப்பசாமியின் 1 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும் அப்பகுதியில் மல்லிகை, கனகாம்பரம், வெண்டை, கத்தரி உள்ளிட்ட செடிகளும் காற்று, மழையால் சாய்ந்துவிட்டன. மழையால் விளைச்சலை இழந்துள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.