பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள நம்புதாளை கிராமத்தில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட இந்த அரசு பள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 65 பேரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத வெற்றியைப் பெற்றுள்ளனர்.
ஆனால் பிளஸ்1 சேருவதற்கு அனைவரும் வேறு பள்ளிகளை நாட வேண்டியுள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலனோர் வெளியூர் சென்று தங்களது குழந்தைகள் படிப்பதை விரும்புவதில்லை. இதனால், பலரின் கல்வி பாதியுடன் நிறுத்தப்படுகிறது.
இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி இந்த ஆண்டு முதல் பிளஸ்1 வகுப்புகளைத் தொடங்கினால், தற்போது 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அனைவரும் மேற்படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.
எனவே நம்புதாளை பள்ளியைத் தரம் உயர்த்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.