பரமக்குடி அருகே எமனேசுவரம் ஜீவாநகரில் பள்ளி மற்றும் கோயில்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பரமக்குடி பகுதியில் இருந்த 8 மதுபானக் கடைகளில் 6 கடைகள் அகற்றப்பட்டன.
இதில் எமனேசுவரம் ஜீவாநகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி, கோயில்கள் உள்ள நயினார்கோவில் சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடை அகற்றப்படவில்லை. இதனை அகற்ற வேண்டும் என ஏப்ரல் 23-ஆம் தேதி அப்பகுதி மக்கள் அக்கடை அமைந்துள்ள பகுதி மற்றும் எமனேசுவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர் பெ.காளிமுத்தன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின்னரும் கடை அகற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அங்கிருந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நயினார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுபானக் கடைக்கும் மாற்று இடம் பார்க்கப்படுகிறது. அங்குகொண்டு செல்லும்வரை இங்குள்ள கடை திறக்கப்படாது என வட்டாட்சியர் எஸ்.ராஜகுரு இங்குள்ள உத்தரவாதம் அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.