கமுதியை அடுத்துள்ள அபிராமம் அருகே விரதக்குளத்தில் பயணியர் நிழற்குடை அருகே எட்டித்தொடும் அளவிற்கு மின்மீட்டர் உள்ளதால், அதனை பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தொட்டு விளையாடும் பட்சத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அபிராமம் அருகே 7 கிமீ., தொலைவில் விரதக்குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இருந்து 2 கிமீ., தூரம் பயணித்து கமுதி-மதுரை பிரதான சாலையை அடைந்து அபிராமம், கமுதி, அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்றுவருகின்றனர். இந்நிலையில் விரதக்குளம் கிராமத்தில் இருக்கும் பயணியர் நிழற்குடை அருகே இரண்டு அடி உயரத்தில் எட்டித் தொடும் அளவிற்கு மின் மீட்டர் பெட்டி உள்ளது. இந்த மின் மீட்டர் பெட்டியிலிருந்து குடிநீர் தொட்டி, தெருவிளக்கு, விரதக்குளம் குடியிருப்பு, செங்கல் சூளை ஆகிய பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கபட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பயணியர் நிழற்குடை அருகே உள்ள இந்த மின் மீட்டர் பெட்டி சிறுவர்கள் தொடும் தூரத்தில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
எனவே மாணவர்கள், பொதுமக்களின் நலன்கருதி எட்டிதொடும் அளவிற்கு உள்ள மின் மீட்டர் பெட்டியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியமைக்க , அபிராமம் மின்சார வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.