ராமநாதபுரம் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சட்ட சேவைப் பெட்டி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கயல்விழி விழாவுக்கு தலைமை வகித்து அப்பள்ளியில் பயிலும் மாணவியருக்கு சட்ட சேவைப் பெட்டியை வழங்கிப் பேசியது:
பெண்கள் சட்டப் பாதுகாப்பு தேவைப்பட்டால் இப்பெட்டியில் மனுவாக எழுதி போட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தகுந்த சட்டம் சார்பான அனைத்து உதவிகளையும் செய்யவே சட்ட சேவைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது என்றார். தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.வி. அணில்குமார் பேசுகையில், தமிழகத்திலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவியருக்காக சட்ட சேவைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் பள்ளியின் தாளாளர் டி. மனோகரன் மார்ட்டின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி. துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.