ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புதன்கிழமை 5 மணல் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.
திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த 5 லாரிகளை சோதனையிட்டபோது அவற்றில் மணல் ஏற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து மணல் ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது. மணல் ஏற்றி வருவதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் வழக்குப் பதிந்து 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன்(45), ஜஸ்டின்ராஜ்(50), தளவாய்புரத்தைச் சேர்ந்த சந்திரன்(47), நாகர்கோவிலைச் சேர்ந்த ரெத்தினசுயம்பு(50), ராஜபாளையத்தைச் சேர்ந்த மணிபாரதி(55) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.