திருவாடானையில் புதன்கிழமை பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், மத்திய அரசின் இலவச எரிவாயு உருளையை பயனாளிகளுக்கு வழங்கியும் மற்றும் மக்கள் மருந்தகத்தையும் திறந்து வைத்தார்.
திருவாடானைஅருகே சி.கே.மங்கலத்தில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்தார். பின்னர், திருவாடானை பேருந்து நிலையம் அருகே பாஜக கொடியினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு எரிவாயு உருளை வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் அராஜகத்தையும், கலவரத்தையும் ஒடுக்க மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படவேண்டும்.
டி.டி.வி. தினகரன் மீது போடப்பட்ட வழக்கு காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்டதா என்பதை அவர் நீதிமன்றம் மூலம் தீர்வு காணவேண்டும். கூட்டணி பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும். யார் கட்சி தொடங்கினாலும் வரவேற்போம். எங்களது கட்சியில் சேர்ந்தாலும் ஆதரிப்போம் எனத் தெரிவித்தார்.
இதில், மாவட்டத் தலைவர் முரளிதரன், ஒன்றியத் தலைவர் கண்ணன், கோபி, ரெத்தின குமார், கிட்டங்கி மேலாளர் மாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.