பரமக்குடி பகுதியில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாறுகால் முறையாக பராமரிக்கப்படாததால் மழைநீருடன் கழிவுநீர் சாலைகளில் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பருவமழை பெய்யாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலைகுள்ளாகி வந்தனர்.
இதனால் நெல், மிளகாய் உள்பட விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் கிராமப்புற விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியுற்றுள்ளனர்.
நகராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளில் வாறுகால் முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பெய்த மழைக்கு மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பெய்த மழையுடன் நிலத்தடி நீர் ஆதாரம் கிடைத்திட வைகை அணையிலிருந்து குடிநீருக்கான தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.