ராமநாதபுரத்தில் 10 வயதுச் சிறுவன் புதன்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் பாலமுருகன் மகன் அஜித்குமார்(10). இச்சிறுவன் ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 -ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் பாதிப்பு என சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 நாள்களுக்கும் மேலாக பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் நோய் முற்றிய நிலையில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டார். காய்ச்சல், வாந்தி, தலைவலி ஆகியன அதிக அளவில் இருந்தது. வெள்ளை அணுக்கள் போதுமானதாக இருந்ததால் அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.