கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, கல்லூரி நிறுவனர் அகமது யாசின் தலைமை வகித்தார்.
முதல்வர் மணிசேகரன், பேரையூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜன், சித்த மருத்துவர் சாந்தி , பகுதி சுகாதார செவிலியர் எஸ். அருள்ஞான புவனசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மழைக் காலங்களில் தொற்று நோய் மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு, மாணவ-மாணவிகள், அலுவலர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
சித்த மருத்துவர் சாந்தி கூறுகையில், டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்து கை கொடுக்காததால், சித்த மருந்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
இதன்மூலம், காய்ச்சல் குறைவதுடன், ரத்த தட்டணுக்களும் அதிகரிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ராமமூர்த்தி , சேதுபதி ஆகியோர் செய்திருந்தனர்.