ராமேசுவரத்தில் கடத்தி வரப்பட்ட 126 மதுபாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ராமேசுவரம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், இப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பாம்பன் பகுதியிலுள்ள மதுக் கடையிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரம் வேர்கொடு பகுதியில் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக, காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, குற்ற நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் ரத்தினவேல் மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 126 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மதுபாட்டில்களுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டி வந்த ரவி (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுபாட்டில்களை, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மு. மகேஷ், ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் உதவி ஆய்வாளர் வேலம்மாள் ஆகியோர் பார்வையிட்டு, ரவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.